ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக “இந்து” என்.ராம் நியமனம்

பல்வேறு ஊடகவியல் அமைப்புகள், ஊடக நிறுவனர்கள், ஊடக நிறுவனங்கள், செய்தியாளர்கள் இணைந்து உருவாக்கிய ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ‘தி இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் அரசுகளும், ஆதிக்க சக்திகளும் செயல்பட்டபோது அவற்றை வெற்றிகரமாக முறியடித்த ‘இந்து’ என்.ராமின் பணியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி பாராட்டுகிறது. ஊடக செய்தி ஆசிரியர்கள், நிறுவனர்கள், செய்தியாளர்கள் 16 பேர் பங்கேற்ற ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் கூட்டம் கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. “இந்திய தண்டனை சட்டத்தின் 124-வது பிரிவின் கீழ் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது” என்று தீர்ப்பளித்த சென்னை குற்றவியல் நடுவர் மன்ற நடுவரின் தீர்ப்பை உறுதி செய்த, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி வரவேற்று வாழ்த்துகிறது. கடந்த 7 மாதங்களாக அமைப்பின்றி செயல்பட்டு வந்த ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியை அமைப்பாக்குவதற்கான தீர்மானம் ஒன்றையும் ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி ஒருமனதாக நிறைவேற்றியது. ஊடக சுதந்திரத்தைப் பேணுவதையும் கடைசி பத்திரிகையாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் முதன்மையான நோக்கங்களாக கொண்ட ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி தனது சாசனத்தை இந்த கூட்டத்தில் நிறைவேற்றியது, இந்திய அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள பேச்சு சுதந்திரத்தை பேணுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குவதே இந்த சாசனத்தின் அடிநாதம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment