நெகிழி (Plastic) ——– தேவை அதிக விழிப்புணர்வு

இந்தியாவில் மட்டும் தற்போதைய நிலவரப்படி சராசரியாக வருடத்திற்கு பதிமூன்று மில்லியன் டண் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அதில் மக்கா கழிவாக தங்கி விடும் பிளாஸ்டிக்கின் அளவு மட்டும் ஒன்பது மில்லியன் டண்ணாக இருக்கின்றது. மேலும் 2020 ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் மட்டும் இருபது மில்லியன் டண்ணாக உயர வாய்ப்புள்ளது என்றும் கணிப்புகள் கூறுகிறது.
இதனால் ஏற்கனவே இந்தியாவில் மஹாராஸ்ட்ரா, தெலுங்கானா மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்ட நெகிழிக்கான தடை, 2019 வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து தமிழகத்திலும் அமலுக்கு வந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதனையடுத்து தமிழகமெங்கும் உள்ள கடைகள், பல்பொருள் அங்காடிகள் என பெருமளவில் துணி பைகள் புழக்கத்தில் வர தொடங்கிவிட்டன. ஜனவரிக்கு சற்று முன்னதாகவே இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் வீடுகளிலும் கடைகளிலும் பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறபடுத்தவது குறித்தோ அதனை இனி வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பதை பற்றியோ எது ஒரு தடையோ சட்டமோ இன்னும் வந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் நெகிழியின் துணையை சிலரால் ஒரேடியாக ஒதுக்கிவிடவும் முடியவில்லை.
பலசரக்கு கடைகளில் இன்றும் பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே சீராக பேக் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு கொண்டுதானிருக்கிறது. அங்காடிகளில் இருந்து அதே பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றப்பட்ட பொருட்களை தான் இறுதியில் நாமும் துணி பைகளில் வாங்கி செல்கிறோம்.
என்ன பயன்?
நெகிழி தடையினால் ஏற்பட்டுள்ள சிரமங்களும் ஏராளம்தான். நெகிழி பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பதும் பெரும் கேள்விகுறிதான். பத்து வருடம் முன்பெல்லாம் குப்பை கொட்டுவது ஒரு சாதாரண செயல். வீடுகள் அருகில் சிமெண்டினால் ஆன நிரந்தர குப்பை தொட்டிகள் நகரங்களின் வீதிகளில் பல இடங்களில் காணப்படும். வீட்டின் சமையலறை மற்றும் இன்ன திட கழிவுகளை வீட்டில் இருந்து பிளாஸ்டிக் பையின் துணையின்றி குப்பை டப்பாக்களில் எடுத்து கொட்டிவிடுவோம்.
இன்றோ குப்பைகள் போடுவதற்கு கார்ப்பரேசன் மற்றும் நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் தள்ளிக்கொண்டு வரும் சக்கர ஊர்திகளுக்காக காக்க வேண்டியதாக உள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளின் துணையில்லாமல் குப்பைகளை தேக்கவும் முடியாது. அதுவும் இருவரும் வேலைக்கும் செல்லும் குடும்பத்தில் குப்பை கொட்ட கூட வீட்டில் யாருமில்லாமலும் நேரமில்லாமலும் போகும் சமயம் அருகில் உள்ள ஏதாவது இடத்தில் குப்பையை கொட்ட தொடங்கிவிடுகிறார்கள். இதனாலேயே பல இடங்கள் சிறு சிறு குப்பை கிடங்குகளாக மாறிப்போகின்றன.
வீசி எறியும் இது போன்ற பிளாஸ்டிக் கவர்கள் காணும் இடமெல்லாம் மக்க வழியில்லாமல் ஒன்று மண்ணில் புதைந்தோ அல்லது திட குப்பையாகவோ மாறி விடுகிறது. முன்பெல்லாம் எவர்சில்வர் டிபன் பாக்ஸ்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இன்றோ ஒழுகாதென்ற உத்திரவாதத்துடன் பல வண்ணங்களில் நெகிழி உணவு டப்பாக்களே உபயோகிக்க படுகிறது.
பிளாஸ்டிக் ஓர் திட பொருள். அது ஓர் திட கழிவு அல்ல. அதை அத்தனை சுலபமாக அழித்து விடவும் முடியாது. வளரும் மற்றும் வளர்ந்த மேலை நாடுகள் கூட இன்றும் திணறுவது இந்த திட கழிவு மேலாண்மை திட்டத்தில்தான். சுலபமாக உருவாக்கி விட கூடிய பிளாஸ்டிக் பாலிமர்களின் ஒரு சிறு இழை மக்குவதற்கு குறைந்தது ஆயிரம் வருடங்கள் எடுக்கும். உணவுடன் பிளாஸ்டிக் பொருட்களின் தன்மை கலக்கும் போது கேன்சர் போன்ற பல வியாதிகள் வருவதாக ஆராய்ச்சிகள் நிருபித்துள்ளன. இந்த நிலையில் வீடுகளில் திரும்பிய இடமெல்லாம் நெகிழியால் ஆன பொருட்களே காணப்படுகிறது. இவையெல்லாம் மக்குவதற்குள் உலகமே அழிந்து கூட போகலாம்..
முன்பெல்லாம் பெட்டிகடைகளில் கிடைத்த கடலை மிட்டாய், தேன் மிட்டாய் போன்ற சமாச்சாரங்கள் இன்று அதற்கே உரிய ஸ்மார்ட் கோடுகளுடன் நெகிழி உறைகளில் உலா வர தொடங்கிவிட்டது. நவீனமயமாக்கல் என்ற பின்னணியில் எது ஒரு பொருளும் சுத்தமாக அழகாக சுற்றப்பட்டு பிளாஸ்டிக் கவர்களின் துணையோடுதான் விற்பனையும் செய்யப்படுகிறது. இன்று பெட்டிகடைகளில் கடைகாரர் கையால் எடுத்து தரும் திண்பண்டங்களை சுகாதார நோக்கோடு தவிர்க்கும் நாம் பல மாதங்கள் பிளாஸ்டிக் பாலிமருடன் இறுக்கமாக இணைந்து பயணித்து பின் நம் உடலில் நச்சாக சேர போகும் உணவுகளை கூடுதல் விலை கொடுத்து வாங்கி குவிக்கின்றோம்.
நெகிழி உபயோகம் புலி வாலை பிடித்த கதையாக போய் விட மனிதர்களுக்கு அதிலருந்த மீள தேவையெல்லாம் நெகிழி குறித்த விழிப்புணர்வும் தெளிவும் தான். மனிதன் அவசர வாழ்க்கையை விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ தொடங்கியதன் பின்விளைவு தான் இந்த நெகிழியால் மனிதனும் விலங்குகளும் படும் பாடு. சுத்தவும் சுழலவும் மட்டுமே தெரிந்த பூமிக்கு தன்னை மனிதன் சுத்தமாக வைத்திருக்கிறானா என்ற கேள்வி சமீபத்தில் எழுந்து விட்டது போல. தன் மண் வளத்தையும் இயற்கை வளத்தையும் அழித்து வரும் மனித குலத்திற்கு நிதான அழிவை காலம் வழி பூமி உணர்த்த தொடங்கிவிட்டதென்னவோ உண்மை. நெகிழி தடை பயனளிக்குமா? என்று தெரியவில்லை, ஆனால் இந்த முயற்சி சுற்றசூழல் மாற்றத்திற்கான சிறு தொடக்கமாக இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சிதான்.
—முனைவர் ஜெ.வீ.அருண்
(உதவிப் பேராசிரியர், பொருளியல் துறை, அரசு ஆடவர் கலைக்கல்லூரி, நந்தனம், சென்னை)

Related posts

Leave a Comment